Esoteric Darkness [கறுவழி]




Go back to parent site Esoteric Darkness

கறுவழி செல்ல


Wednesday, January 06, 2010

இன்றொரு நாள் கழிந்தது... | Another day passes by...

அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது இந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். இதை நீங்கள் கேட்டதில்லை என்றால் ஒரு முறை கேட்க வேண்டும்! "குரு ரமண கீதம்" என்ற ஒலிப்பேழையில், கிட்டதட்ட அனைத்து பாடல்களும் இளையராஜா பாடியது.

இந்த பாடல் முழுக்க முழுக்க உரைநடை வடிவில் உள்ள வார்த்தைகளை ஆலாபனை போல தொகுத்து வழங்கியிருப்பார். அது அவரது ஞானம். ஆனால் இந்த பாடலை பொருத்த வரை என்னை அதிகம் கவர்ந்தது வரிகள் தான். இரண்டு வரித்துளிகள் மனதில் பதிந்து விட்டன. நாம் வாங்கும் தன்மையில் அதிகம் இருக்கும் போது இந்த வரிகள் செய்யும் மாயையை விளக்குவது கடிணம்:

"இன்றொரு நாள் கழிந்தது என் வாழ்நாளில்..."
ஏதோ எழுந்தோம் செய்தோம் என்று இருக்கும் நாளில் இதை சரியான மனநிலையில் கேட்டால், முகத்தில் பச்சை நீர் தெளித்தது போல ஒரு விழிப்பு ஏற்படும். விளக்கம் கூட தேவையில்லை. இப்படித்தானே ஒவ்வொரு நாளும் போகிறது என்ற ஒரு நிதர்சனம்.

"இன்னொரு நாள் கிடைப்பதரிது மனமே..."
இதை விட பெரிய எச்சரிக்கை தேவையா? இப்போழுது தெருவில் நடக்கையில் தலையில் இடி விழுந்து மரிக்கலாம் தானே?

ஒவ்வொரு நாள் காலையிலும் பிறந்து, இரவில் மரிக்க போகிறோம் என்ற உணர்வுடன் வாழ்ந்தால் தான் முழுமையாக வாழ்வோம் என்று நினைக்கிறேன். செய்யும் செயல் எதுவாயினும் அதன் தன்மை சரியான அளவுகோலில் அமையும்!

Tuesday, January 05, 2010

பாரதி - Bharathi

"காக்கை சிறகினிலே..." - ஒரு காக்கையை பார்த்தால், சராசரி மனிதனுக்கு கல்லை எடுக்கத்தான் தோன்றும். இந்த கவிஞனுக்கு கடவுள் தெரிந்தது. சற்று தினங்களுக்கு முன் ரயிலில் இந்த பாடலை கேட்டு கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒருவித வலி உணர்வுதான் ஏற்படுகிறது. ஏன் என்று விவரிக்க தெரியவில்லை. ஒரு குழந்தை போல சமூகத்தின் மடியில் விழுந்தவன் இவன். விழுந்ததன் மதிப்பு தெரியாமல் தூக்கி எறிந்து விட்டது சமூகம். நூறு ஆண்டுகள் பிறகும் அவன் வாழ்ந்ததன் அர்த்தம் புரியாவிடினும், அந்த உயிரின் மூலம் வெளிவந்த படைப்பின் அழுத்தம் புரிகிறது இப்போதுள்ள மக்களுக்கு.

"நல்லதோர் வீனை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ..." என்று தன்னை பற்றித்தான் பாடினானோ? இவருக்கு பதிலாக இளையராஜா எழுதியது நினைவிற்கு வருகிறது: "வீதியில் இசைத்தாலும் வீனைக்கு இசையுண்டு!"

நிஜம்தான்! ஆனால் வீனை என்று தெரிந்தும் புழுதியில் எறிந்த நம்மை என்னவென்று சொல்வது!

Sunday, November 22, 2009

மெளனத்தின் வலி | The pain of silence







முத்துகுமாரின மரணம், இங்கே சத்குருவின் பேச்சு, இந்த கூட்டம் எல்லாமே உள்ளிருக்கும் வலியின் வெளிப்பாடுதானே? இந்த வலிதான் வன்முறையின் வெளிப்பாடு கூட. வன்முறை இனிமேல் உதவாது என்று இனியாவது புரிய வேண்டும் இல்லையா? மற்றும், இந்த வலி, யாருக்கு புரிய வேண்டுமோ அவருக்கு புரியவில்லையே? இதற்கு நம் அளவில் நாம் என்ன செய்யலாம்?

Friday, November 20, 2009

புறம் பேசுதல் | Talking behind someone's back

புறம் பேசுதல், நாம் நினைப்பதை விட பாதிப்பானது.

இது பழகிப்போனால், நாம் ஒருவரிடம் நேரில் பேசும் போது அதன் நம்பகத்தன்மை குறைந்து போகும். இது இருவரும் அறியாமலேயே நடக்கும் ஒன்று.

அதனால் தான் இரண்டு வழிகளில் ஒன்றை கடைப்பிடிப்பது நன்று:

  1. ஒருவர் இல்லையென்றால் அவரை பற்றி பேசுவதை தவிர்த்து விடுவது
  2. பேசும் போது யாரை பற்றி பேசுகிறோமா அவர் இருப்பதாக எண்ணிக்கொள்வது. அவர் இருந்தும் அதை பேசுவோம் என்றால் தாராளமாக பேசலாம்
இதற்கெல்லாம் அடிப்படை, புறம் பேசுவதில் கிடைக்கும் சுகம் இல்லாமல் போனாலும் நம் வாழ்வு இயல்பாக நடக்கும் என்ற தெளிவுதான்! 

Wednesday, October 21, 2009

ஆதவன் | Adhavan | Aadhavan

தமிழில்: ஹஹ்ஹஹ்ஹா!
ஆங்கிலத்தில்: LOL!

பிகு: என்னை சொல்லனும்! KS ரவிகுமார் டைரக் ஷன், வடிவேலு அப்புறம் நயந்தாரா photo போஸ்டர்ல, இதல்லாம் பாத்தும் போனேன்ல! Surya, time to take serious stock check on the movies you are signing up for!

Monday, October 12, 2009

ஈரம் - Eeram

ஈரம் - வெளியிலும் உண்டு, உள்ளும் உண்டு!

ஷங்கர், பிரகாஷ்ராஜ் இருவருமே பாராட்டுக்குரியவர்கள் தான். திறமையை தேடி பிடித்து படமாக தயாரிப்பதால் தானே இந்த மாதிரி படங்கள் வெளி வருகின்றன. அறிவழகனுக்கு இது முதல் படமா தெரியவில்லை. படம் தொடங்கி முடியும் வரை ஒரு தெளிவு தெரிகிறது.

இது ஸஸ்பென்சோடு பார்க்க வேண்டிய படம் என்பதால் மேற்கொண்டு எதுவும் எழுத வில்லை. இந்த மாதிரி முயற்சிகளை தாரளமாக வரவேற்கலாம்!

Friday, August 28, 2009

சோதனை வந்தால்... | When trouble strikes...

சொந்த வாழ்வில் சோதனை வந்தால் சமாளித்து தான் ஆக வேண்டும். இல்லையெனில் வாழ்க்கை விடாது!

ஆனால், அனைவரும் அனுபவிக்கும் ஒரு சமூக சோதனை என்றால்? உதாரணத்திற்கு நமது சமூகத்தில் ஆயிரம் சொல்லலாம்:

- காவல் துறையின் அவல போக்கு
- நேர்மையில்லாத அரசியல்
- சாலை விதிகளின் புறக்கணிப்பு

இவை உதாரணங்கள் மட்டுமே. அடிப்படையாக நடப்பது என்னவென்றால், நம்மில் பலர் செய்வது இவைதான்:

- அவற்றை சகித்து கொள்ள பழகிக்கொள்வது
- கோபப்படுவது
- பிரச்சணையோடு பிரச்சணையாக மக்கி போவது

இதில் எதுவுமே தீர்வில்லை. நீங்கள் பிரச்சணையை மோசமாக்காமல், உங்கள் அளவில் செய்ய முடிந்ததை செய்தால் ஒரு படி வெற்றி. ஏனெனில் அனைவரும் அதை செய்தால் பிரச்சணையே இருக்காது. ஆனால் "அனைவரும் செய்வது" எனும் நிலை நாளை நடப்பது இல்லை.

சரி, ஒரு பிரச்சணை இருக்கும் போது அதை ஆணிவேர் வரை சென்று களைந்து எறிவது சாமாணியமான செயல் இல்லை. அந்த பிரச்சணையால் ஆதாயம் அடைபவர்கள் அல்லது, அதை களையும் பொறுப்பில் இருப்பவர்களின் சோம்பல் காரணமாக ஏக எதிர்ப்பு ஏற்படலாம். ஏன், உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு கூட ஏற்படலாம். ஆனால், சமீபமாக ஒரு பிரச்சணையை ஒரு 28 வயது வாலிபர் இது போல களைந்து எடுத்திருக்கிறார். இது நாளை செய்தியில் வரப்போவது இல்லை; ஆனால் இது வெளியில் தெரிய வேண்டிய, பரவ வேண்டிய ஒரு முயற்சி மற்றும் மனநிலை. எப்படி யோசித்து பார்த்தாலும் இது அசாதரணமான முயற்சி. அதற்கு வெற்றி கிடைத்திருக்காவிட்டாலும் இது பெருமுயற்சி. ஆனால், 10 மாதம் கழித்து இப்போது பிரச்சனைக்கு தீர்வும் கிடைத்து விட்டது.

தன் குடியிருப்பில் மனித மலம் கலந்த தண்ணீர் (36%) இருப்பது தெரிந்து, குடியிருப்பின் சொந்தக்காரர், மற்றும் காவல் துறையினரின் (மற்றும் பல அரசு அதிகாரகளின்) அலட்சியபோக்கும், அவமரியாதைகளையும் தாண்டி எப்படி சரி செய்தார் ரமேஷ் என்பதே கதை. அவர் வாயலேயே படியுங்கள்

1) கிணறு வெட்ட பூதம்
2) முயற்சிகள் தொடர்கின்றன
3) நீரின் தரம் உயர்ந்தது

Monday, August 24, 2009

ஆயிரம் சிதறல்

Copyright tgkohn, by Creative Commons. Parent page here:



தூங்கும் உடலை மொய்க்கும்
ஆயிரம் கொசுக்களை போல
விழிக்கும் மனிதனை மொய்க்கும்
ஆயிரம் சிதறல்கள்


அத்தனையும் மூட்டை கட்டி
குப்பையில் கொட்ட எத்தனிக்கும் வழி ஒன்று
அத்தனையிலும் திளைத்தும் திளைக்காமல்
ஓடும் வழி ஒன்று


இரண்டிற்கும் இடையில் தவித்து
திளைத்தும் திளைக்காமல் நகருது கால உருண்டை!

Tuesday, August 18, 2009

அந்த ஒரு விஷயம் மட்டும்... | That one little thing...


வாழ்க்கையில் பல விஷயங்களை "நல்லது" / "கெட்டது" என்று பிரித்து விடுகிறோம். ரொம்ப சாதரணமாக நடக்கும் விஷயமாக இருந்தாலும், இது ரொம்ப சாதரணமான விஷயம் இல்லை!


"நல்லது" / "கெட்டது" என்பதை "பிடிக்கும்" / "பிடிக்காது" என்று ஒரு படி கீழே இறக்கலாம். "பிடிக்கும்" / "பிடிக்காது" என்பது பல விஷயங்களை மையப்படுத்தி இருக்கிறது:


1. சமூக பழக்கவழக்கங்களை பொறுத்து
2. இன்பம் (நல்லது / பிடிக்கும்), துன்பத்தை (கெட்டது / பிடிக்காது) பொறுத்து
3. நமக்கே உரித்தான பல தன்மைகளை பொருத்து

காரணம் என்னவாக இருந்தாலும், "பிடிக்கும்" / "பிடிக்காது" என்று வந்து விட்டால், இன்னும் ஒரு படி கீழே இறக்கி பார்க்கலாம்:


"பிடிக்காது" என்று சொன்னால், இப்போது இருப்பது ஏற்புடையதாக இல்லை என்று சொல்கிறோம். ஒரு வகையில் "பிடிக்கும்" என்று சொல்வதும் அப்படித்தான். ஏனேன்றால் நடப்பது ஏற்புடையதாக இருந்தால் "பிடிக்கும்" என்று சொல்லும் தேவையே இருக்காது.


இருப்பது ஏற்புடையதாக இல்லையென்றால் இதுதான்:

இப்போது என்பது, இதுவரை நடந்ததின் மொத்த சாரம். வாழ்க்கை, அதை உருவாக்கியவர் இரண்டின் கலவை. அதைத்தான் "கெட்டது" என்று சொல்வதன் மூலம் எதிர்க்கிறோம். மகா சண்டை அது. கடவுளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை - அசுர பலம், படைப்பு முடியும் வரை நேரம் இரண்டுமே இருக்கிறது. எப்படியும், ஒரு நூறு பிறவிக்குள்ளேனும் சண்டையை விட்டுத்தான் ஆக வேண்டும்.


இப்போதே விட்டால் என்ன?


Note: The image in this post is licensed with creative commons.

The copyright for this image belongs to dullhunk. Click on the image or here to view the image on dullhunk's website.

Wednesday, August 05, 2009

021 - கைத்தொழில் போற்று


"வெண்ணிலா கபடி குழு" படத்தில் ஒரு வசனம் வரும். கபடிக்கு, மண்ணும் மனிதரும் இருந்தால் போதும் என்று. அது போல, கைத்தொழிலுக்கு கை இருந்தால் போதுமே?

ஒரு தொழிலின் வரவேற்பு அந்த சமூக சூழலின் தாக்கத்தை பொருத்து வேறுபடும். ஆனால் ஒன்றுமே தெரியாது என்ற நிலையில் இருந்து எனக்கு ஒரு கைத்தொழில் தெரியும் என்ற நிலை நம்பிக்கை தருவதாக அமையும். அது மட்டுமல்ல, ஒரு தொழில் பழக தெரிந்தவருக்கு வேறு ஒரு, காலத்திற்கு ஒத்த தொழில் பழகுவது சுலபம் தானே?

இதற்கு ஆதாரபூரவமான உதாரணம் பார்க்க வேண்டும் என்றால், மிகவும் அடக்கமான முறையில் தொடங்கிய ஈஷா கிராப்ட்டை எடுத்துக்கொள்ளலாம்.

Note: The image in this post is licensed with creative commons.
The copyright for this image belongs to deepakkt. Click on the image or here to view the image on deepakkt's website.

Monday, July 27, 2009

குருவம்மா

கவிதா குருவம்மா காபி குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். யதார்த்தமாக பார்ப்பவர்களுக்குக்கூட குருவம்மா சோகமே உருவாக உட்கார்ந்துக்கொண்டிருந்தது  தெரிந்திருக்கும். மனதின் ஆனந்தமோ சோகமோ எளிதாக வெளிக்காட்டும் முகம். கவிதாவின் வீட்டிற்கு வேலைக்கு வந்திருந்தாள் குருவம்மா. மீனவ கணவனை இழந்து செய்வதறியாதிருந்த அவளை தெரிந்த ஒருவர் கவிதாவின் வீட்டில் வேலைக்கு விட்டிருந்தார்.

"கொழந்த எதாவது..."

காபி குடிப்பதை நிறுத்திவிட்டு கவிதாவை பார்த்தாள் குருவம்மா.

"கடச்ச பண்த்த எல்லாம் குச்சு குச்சே தீத்துட்டாம்மா அவன். கடவுள் இருக்கான். நல்ல காலமா வவுத்துல புழு பூச்சி எதுவும் குடுக்குல. இல்லாங்காட்டி இப்போ அத்தையும் வச்சு என்னாத்த பண்ணிருப்பேன்?"

கவிதா பெருமூச்சு விட்டாள்.

"என்ன வேலை தெரியும்?"

"நெத்திலி ஊறுகா போடுவேன். மீன் இருந்தா வித்து தரேன். எறா புட்டு நல்லா செய்வேன். சப்பு கொட்டிகுனு துன்னுவான் அவன்..."

கவிதா வீட்டில் சைவம். சொன்ன அனைத்துமே மீன் சம்பந்தப்பட்டிருந்ததை பார்த்து கடகடவென சிரித்தாள்.

"இன்னாம்மா?"

"மீன் வாசம் கொமட்டாதா?"

"இன்னாம்மா இப்டி கேட்டுட்ட! என் வாழ்க்கையே அத்த சுத்தி தானே!"

"இங்க சைவம் மட்டும்தான். உனக்கு மீன் இல்லாட்டி ஆவாதுனா தனியா ஸ்டவ் ஒன்னு வாங்கி தரேன், அதுல உன் பாத்திரத்த வெச்சு பண்ணிக்கோ. ஆனா வீட்டு உள்ள சமைக்க வேண்டாம். பசங்களுக்கு ஆகாது." என்றவளை, "இப்படியும் இருப்பாங்களா" என்ற ரீத்யில் ஆச்சர்யமாக பார்த்தாள் குருவம்மா. ஆனால் கவிதா சொன்னது அவளுக்கு திருப்தியாக இருந்தது அவளுக்கு. நெத்திலி ஊறுகாய் இல்லாமல் அவளுக்கும் யோசிக்கவே தெரியவில்லை.

"நீங்க சைவம்னா ஊட்ல எதுவும் பண்ணலம்மா. ஆனா நெத்திலி ஊறுகா மட்டும் தின்ன உட்ருங்கோ!"

மனதில் பட்டதை அப்படியே அவள் பேசியதும், ஏனோ நம்பகம் வாய்ந்த முகம் மாதிரி தெரிந்ததும், முகத்தில் பதித்து வைத்திருந்த அந்த சோகமும், குருவம்மாவை  கவிதாவிற்கு பிடிக்க வைத்துவிட்டது.

"சரி குருவம்மா, மேல உனக்கு ரூம் இருக்கு, அங்கேயே பாத்ரூமும் இருக்கு. நீ போய் மொதல்ல குளிச்சுட்டு சாப்பிடு, மத்ததை அப்புறம் பாக்கலாம். உனக்கு வெச்சுக்க தட்டு தர்றேன் அதிலேயே நீ சாப்பிட்டுக்கலாம். நெத்திலி ஊறுகா..."

"தோ பைல இருக்குதும்மா..."

கவிதா சிரித்தாள். குருவம்மாவை கூட்டிக்கொண்டு அவள் அறையை காட்டினாள்.



வினோதமாக இருந்தது கவிதாவிற்கு. அன்று இரவு அவள் கணவன் மனோஜிடம் அவள் பேசிக்கொண்டிருந்த போது:

"வேலைக்கு ஆள் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டிருந்தேன். ஆனா இந்த மாதிரி கெடைக்கும்னு எதிர்பாக்கலை." - புன்னகையுடன் சொன்னாள்

"ஏன், என்னாச்சு? பிடிக்கலைன்னா வெச்சுக்கவேண்டாம். ரமா கிட்ட சொல்லி வேற யாரையாவது ஏற்பாடு பண்ண சொல்லலாம்"

"சேச்ச, அந்த மாதிரி எல்லாம் இல்ல. மீன் காரி இல்லையா - மீன தவிர வேற எதுவும் யோசிக்க தெரியலை அவளுக்கு. வாயை தொரந்தா நெத்திலி பேச்சுதான்..." - கட கட என்று சிரித்தவாறு சொன்னாள்.

"எப்படியோ, நீ சமாளிச்சுப்பேன்னா சரி. நாளைக்கு சாப்பாடுக்கு நெத்திலி கொழம்பு வச்சு குடுத்துடாத!"

இருவரும் சிரித்தவாறே உறங்க சென்றார்கள்.



அடுத்த சில வாரங்களில் குருவம்மா வேகமாக வேலைகளை எல்லாம் கற்றுக்கொண்டாள். கவிதாவின் குடும்பத்திலும் அவளை நன்றாக ஏற்றுக்கொண்டுவிட, அவர்கள் குடும்பத்தில் ஒரு பகுதி போல ஆகிவிட்டாள் குருவம்மா. மனோஜின் ஒரே நெருடல் அந்த நெத்திலி ஊறுகாய்தான். கவிதாவிற்காக அதையும் விட்டு கொடுத்துவிட்டான்.

வேலையில் மட்டும் இல்லாமல், கவிதா, குருவம்மாவை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த பெண்ணாகவும் புரிந்து கொண்டாள். பணம் ஈடுபடும் செயல் முதற்கொண்டு, உறவினர்கள் வீட்டிற்கு அனுப்புவது என்று அனைத்திலும் குருவம்மா மிகவும் நேர்மையாகவும் ஊக்கத்துடனும் இருந்தது கவிதாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஒரே நெருடல்தான் - குருவம்மாவின் முகத்தில், முதல் நாள் சோகம் அப்படியே இருந்தது. மனதின் அடித்தளத்தில் கணவனை இழந்துதான் இந்த சோகம் இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது. ஒரு நாள் இந்த பேச்சை எடுத்தாள்:

"ஏன் குருவம்மா, ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?"

"உன்னாண்ட என்னாம்மா... சும்மா கேளு"

"மாடசாமி போனது உனக்கு இன்னும் கஷ்டமா இருக்கா?"

கொஞ்ச நேரம் மெளனம்.

"அவன புடிக்கும்தாம்மா. குட்சு குடிச்சு கொடல கெடுத்துகுனான். செத்து போவாம இன்னா பண்ணுவான்."

மாடசாமி மேல் குருவம்மாவிற்கு கோவம் இல்லை என்று புரிந்தது. ஆனால் அவனால் அந்த சோகம் இல்லையென்றும் புரிந்தது. வேறு என்னவாக இருக்கும்?

இன்னும் ஓரிரண்டு வாரம் சென்றிருக்கும். கவிதாவால் அவளை அப்படி பார்க்க முடியவில்லை. மனோஜிடம் இதைப்பற்றி பேசினாள்.

"நீ சும்மா ஏதோ கொழப்பிட்டு இருக்க. அவதான் ஒன்னும் இல்லைன்னு சொன்னா இல்ல..."

"அப்படி சொல்லலடா அவ. அவளுக்கு சொல்ல தெரியலை. அவ்வளவுதான். என்னமோ இருக்கு உள்ள"

"யாருக்கு, அவளுக்கா உனக்கா? அம்மா CID, தூங்க வா!"

"மனோஜ், உனக்கு தான் ஒரு Psychiatrist friend இருக்காரே, அவர் கிட்ட பேசி ஒரு appointment fix பண்ணி குடேன்?"

மனோஜ் முகத்தில் அதிர்ச்சி. "என்னடி ஆச்சு உனக்கு. அவளுக்கு இல்லாத அக்கரை எதுக்கு உனக்கு? அதுவும் psychiatric appointmentஆ? குருவம்மாவை எப்படி சம்மதிக்க வைப்ப?"

"அத நான் பாத்துக்கறேன்டா! எந்த பிரச்சனையும் வராது."

மனோஜ் பெருமூச்சு விட்டான்.



கவிதா, சரியான நேரம் பார்த்துகொண்டிருந்தாள். ஒரு நாள் குருவம்மா சளி பிடித்து, பேச சிரமப்பட்டுகொண்டிருந்தாள்.

"என்னாச்சு குருவம்மா? ஒடம்பு சரியில்லையா?"

"சளிதாம்மா, சரியா பூடும்."

"எங்க பக்கத்துல வா?" - கழுத்தில் கையை வைத்துப் பார்த்தாள்

"என்ன குருவம்மா ஜொரம் மாதிரி இருக்கு?"

"ஜொரம்னாம்மா சொல்ற?"

"ஆமாம், வா டாக்டர் கிட்ட போகலாம்"

"இல்லம்மா எனக்கெல்லாம் தானா சரியா பூடும்"

"எங்க வீட்டு பழக்கம் அதில்ல. அதுவும் உன்ன இப்படி பாத்திட்டு இருக்க முடியாது. ஒரு அஞ்சு நிமிஷம் இரு, டாக்டர் கிட்ட போன் போட்டு கேட்டுடுறேன்!"



டாக்டர் லலிதா வீட்டில்:

"குருவம்மா உள்ள வாம்மா - ஏன் ஜொரம்னு செக் பண்ணிடலாம். கவிதா, ஒரு அரை மணி நேரம் ஆகும், செக் பண்ணிட்டு உள்ள கூப்பிடுறேன்"

கவிதாவுக்கு கொஞ்சம் பயம்; ஏது எசகு பிசிகாகி விடக்கூடாதே என்று. ஏதோ ஒரு பத்திரிக்கையை எடுத்து புரட்டி பார்த்தாள். மனம் அதில் செல்லவில்லை. எப்படா அந்த அரைமணி நேரம் முடியும் என்றிருந்தது அவளுக்கு. அரை மணி நேரம் கடந்து ஒன்றரை மணி நேரம் ஓடியதும், மண்டை வெடித்துவிடும் போல் ஆகி விட்டது அவளுக்கு. கதவு திறந்து குருவம்மா வெளியே வந்தாள்.

"கவிதா, நீ உள்ள வாம்மா. குருவம்மா, கவிதாவும், ஏதோ தல வலின்னு சொன்னா. நீ ஒக்காந்திரு, ஒரு அரமணி நேரத்துல வந்துடுவாங்க."

"அரமணியா, இல்ல ஒன்றரை மணியாம்மா?"

கவிதாவிற்கு கேட்டதை நம்பமுடியவில்லை. குருவம்மாவா ஜோக் அடித்தது? கடகடவென சிரித்தாள்.

உள்ளே, டாக்டர் அறையில்:

"டாக்டர் குருவம்மாவிற்கு ஏதோ சோகம் இருக்குதானே?"

"ஆம்மாம்மா, உன் கணிப்பு சரிதான். ஆனா, அவள் புருஷனை இழந்ததுனால வந்த சோகம் இல்ல இது?"

"பின்னே?"

"அவ வாழ்க்கையே அந்த கடலையும் மீனையும் சுத்திதான். அதை இழந்ததுநால வந்த சோகம் இது?"

"என்ன சொல்ல வர்றீங்க?"

"பிழைக்க வேற வழி தெரியாம உன் வீட்டுல வேலைக்கு சேந்திருக்ககா. ஆனா, கடலும், மீன் வாசனையும், அந்த சூழலும், ரொம்ப ஆழமா பதிஞ்ச மனசு அது. சில பேரால மாறுற சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி அவங்களை மாத்திக்க முடியும். குருவம்மாவுக்கு அது இதுவரைக்கும் முடியலை. இனிமேல் முடியலாம். காலம் ஆகும். ஆனா, அந்த வாழ்க்கைக்கு நிச்சயமா அவளுக்கு ஒரு பெரிய ஏக்கம் இருக்கு"

என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள் கவிதா.

"ஆனா, அவ சோகத்தை மேலோட்டமா பாக்காம, நீ அவள இங்க கூட்டிட்டு வந்தது என்க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கவிதா. இப்போ என்ன பண்ண போற?"

"தெரியலை டாக்டர்!" - லலிதாவின் முகத்தை தாண்டி எதையோ பார்த்து வெறித்தவாறு சொன்னாள் கவிதா!



"CID மேடம், எப்படியோ துப்பு தொலக்கிட்டீங்க. சரி அன்னைக்கு நீ சொன்னதை நான் இன்னும் சீரியசா எடுத்திருக்கணும். சரி இப்போ என்ன idea? "

"குருவம்மாவை அவளோட பழைய வாழ்க்கைக்கு அனுப்புணும் மனோஜ்!"

"எப்படிடி? அவளுக்கு பாத்துக்க புருஷன் கூட இல்ல!"

"டாக்டர் கிட்ட கூட்டிட்டு போன மாதிரி இன்னு ஒரு செட்டப் பண்ணனும். ஏதாவது யோசிக்கறேன்!"

"எதுக்குடி இவ்ளோ மனக்கெடற! எரிச்சலாவும் இருக்கு பெருமையாவும் இருக்கு. நான் என்ன பண்ணனும்? "

"ஒரு ஆயிரம் ரூபா அப்புறம் தேவைப்படும். ரெடி பண்ணி வை!"




"ஏன் குருவம்மா, உன் குடிசை அப்படியேதான் இருக்கு இல்ல, மெரினா பக்கத்துல?"

"ஆமாம்மா. மாடசாமி போனதுலேந்து பூட்டிதான் கெடக்குது! நாலு மாசங்காட்டியும் ஆச்சு இல்ல!

"குருவம்மா, வந்து, வந்து..."

"இன்னாம்மா?"

"இல்ல, எனக்கு முன்னாடி எல்லாம் முதுகுவலி நிறைய வரும். அதுக்காகத்தான் வேலைக்கு ஆள் தேடிட்டு இருந்தேன்! இப்போ நல்லா குணமாயிட்ட மாதிரி தெரியுது..."

குருவம்மாவின் கண்கள் குளமாகி விட்டன. "என்ன வேலயை விட்டு தூக்க போறியாம்மா? நான் எங்கம்மா போவேன்..."

"அழாத குருவம்மா. வேலை செய்யாம இருக்குறது என் ஒடம்புக்கும் நல்லது இல்ல இல்லை! உன் குடிசைதான் அப்படியே இருக்கு இல்ல!"

"ஆனா, அங்க நான் இன்னாமா பண்ணுவேன்? மீன் புட்சாற என் புருசன் இல்லையே!" - அழுதவாறு சொன்னாள் குருவம்மா.

"உனக்கு நெத்திலி ஊறுகா போட தெரியும் தானே?"

சொன்னவுடன் குருவம்மாவின் கண்கள் பிரகாசமாகிவிட்டன. வேலை போனது கூட மறந்து சொன்னாள் - "டக்கரா போடுவேன். நான் போட்டா, பக்கத்துல எல்லாரும் சப்பு கொட்டிகுனு துண்ணுவாங்க!"

"அப்போ அந்த வியாபாரம் பண்ணேன்?"

"நெத்திலி ஓனுமேம்மா!?!"

"வாங்கிக்கோ குருவம்மா. நீ பணம் குடுத்து வாங்கினா, நெத்திலி மட்டும் வாங்கினா போதும்.  பேரம் பேசி வாங்குவியா?"

குருவம்மாவிற்கு வேலை போனதெல்லாம் மறந்து விட்டது. "குடுத்த பணத்துக்கும் அரகிலோ கூடவே வாங்கிட மாட்டேன்! ஆனால், மொதல் போட்றதுக்கு பணம் ஓனுமேம்மா!"

பதில் பேசாம ஆயிரம் ரூபாயை நீட்டினாள் கவிதா. "இன்னும் வேணும்னா எப்ப வேணும்னாலும் சொல்லு!"

மறுபடியும் அவள் கண்கள் குளமாகி பணத்தை வாங்கிக்கொண்டாள்!



"என்ன மனோஜ், அவ போயி மூனு மாசமாச்சு, ஒரு தகவலும் வர்ல?"

"இன்னும் அவள மறக்கலியா நீ? கஷ்டம்னா உங்கிட்ட வந்திருக்க மாட்டாளா?"

"அப்படிதான் சொன்னேன்! கூச்சப்பட்டு வராம இருந்தா?"

"சரியா போச்சு. கூச்சபடுற characterஆ அவ? சைவ வீட்டுலயே நெத்திலி ஊறுகா சாப்டவளாச்சே அவ!"

கவிதா சிரித்துவிட்டாள். "நீ சொல்றது ரைட்தான். ஆனா நாளைக்கு நான் போய் அவளை பாத்துட்டு வர்றேன்!"

அடுத்த நாள், கவிதா குருவம்மாவின் குடிசையை விசாரித்து தேடி சென்றாள். அங்கே...

முதல் முறையாக குருவம்மாவை சிரித்த முகத்துடன் பார்த்தாள் கவிதா. அவளுக்கே நம்ப முடியவில்லை!

"என்னாமா சொல்லாம வந்துட்ட. சே, ஒரு சேர் கூட இல்ல...."

"பாய்லயே ஒக்காந்துக்குறேன் குருவம்மா..."

"நாளைக்கு நான் வர்லாம்னுதான் இருந்தேம்மா, நீயே வந்துட்ட... என்ன மறந்திருப்பன்னு நென்சேம்மா..."

"ஒவ்வெரு நாளும் ஒன்ன ஒரு வாட்டியாவது நெனச்சிருப்பேன் குருவம்மா."

குருவம்மா முகத்தில் பெருமை கலந்த மகிழ்ச்சி.

"எப்படி போகுது நெத்திலி ஊறுகா business?"

"சூப்பரா போவுதும்மா. இப்போ நம்பளாண்டதான் எல்லாரும் ஊறுகா வாங்குறாங்கோ. அந்த டேஸ்டு வரலேன்னு சொல்றாங்க!"

மகிழ்ச்சியாக சிரிதாள் கவிதா.

"இந்தாம்மா..." - அந்த ஆயிரம் ரூபாயை நீட்டினாள் குருவம்மா.

"நான் இதுக்கு வர்ல குருவம்மா."

"தெரியும்மா. ஆனா, இதவிட நெறயாவே வர்தும்மா. வச்சுக்கோ. நெத்திலி கொழம்பு வெச்சுகுறேன் , சாப்டுதான் போற நீ!"

"என்ன குருவம்மா, அதுக்குள்ள எல்லாம் மறந்து போச்சா?"

நாக்கை கடித்தாள் குருவம்மா.

"சாரிம்மா. இரு டீ போட்டு தர்றேன், அத்த்யாவது குடுச்சுட்டு போ!"

"சரி குடு. வீடு பக்கம் வா குருவம்மா. மனோஜ் உன்ன பாத்தா சந்தோஷப்படுவான்!"

"நிச்சயம் வர்றேம்மா!"

அதற்குள் நெத்திலி குழம்பு கொதிக்க ஆரம்பிக்க, அதை இழுத்து வாசனை பிடித்தாள் குருவம்மா!

உப்புக்காற்று - கடல் தண்ணீர் - மீன் வாசம் - குருவம்மா!


Friday, July 17, 2009

நாடோடிகள் | வாமனன் - n-AdOdikaL | vAmanan

இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை. சுப்பிரமணியபுரம்! அதில் வரும் இரண்டு கதாநாயகர்களுக்கும் இரு வேறு படங்கள்! இருவருக்கும் அழுத்தமான second innings!

நாடோடிகள்:
படத்தில் பல குறை நிறைகள். மனதில் நிற்பது, சசிகுமாரின் அலட்டல் இல்லாத நடிப்பு! "சம்போ சிவசம்போ..." பாடல் (படத்தின் ஆணிவேர் அது! ஆனால் அந்த வரிகள் ஏன் என்றுதான் புரியவில்லை. சும்மா எல்லாத்துக்கும் சிவனை வம்புக்கு இழுப்பது வாடிக்கையாகிவிட்டது!) மொத்தத்தில், வித்தியாசமான கதை இழை, ஆனால ஜனரஞ்சகமான படம். ஆடியன்ஸிடம் நன்றாக எடுபட்டிருக்கிறது! எங்கே கிளைமாக்ஸை சொதப்பி விடுவாரகள் என்று பார்த்தால், மொத்தமாக சொதப்பாமல் கொஞ்சமாக சொதப்பிவிட்டு காப்பாற்றிவிட்டார்கள். இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது!

வாமனன்:
நறுக்கு தெறித்தார்போல கிளைமாக்ஸ். ஒரே பிரச்சனைதான். அதை அப்படியே "Enemy of the State" படத்தில் இருந்து சுட்டு விட்டார்கள்! இதை வைத்து என்ன செய்வது? ஹீரோ, சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து அவ்வளவு வித்தியாசம், கெட்டப்பில். அதே அலட்டல் இல்லாத வசன உச்சரிப்பை வைத்ததற்கு அஹமத்தை பாராட்ட வேண்டும். படம் ரொம்ப அதிக இடங்களில் கவனத்தை செலுத்தி ஓட்டம் சிதைபடுகிறது. கூட அந்த copy climax! ஆனால் மற்றபடி நன்றாகவே எடுத்திருக்கிறார்கள்:
பி.கு: Enemy of the State 1998ல் வந்த படம். அந்த கிளைமேக்ஸ் பொருந்தும். இப்போதுதான் YouTube இருக்கிறதே. URLஐ பத்திரிக்கைகளுகு அனுப்பி வைத்தால் முடிந்து போயிற்றே? அப்புறம் ஏன் ஊர் முழுக்க ஓட வேண்டும்?

Monday, July 06, 2009

020 - கேட்டிலும் துணிந்து நில்




இந்த குறிப்பு "அச்சம் தவிர்" குறிப்பை ஒத்து வரும்.


இந்தியாவில் தாமரையை ஆன்மீகத்தோடு நெருக்கமாக சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். யோகத்தின் உச்ச நிலையை ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக வர்ணிப்பார்கள் (the Thousand Petaled Lotus). ஏன் அப்படி? தாமரை சேற்றில் மலர்ந்தாலும், அதன் தன்மையை மாற்றி நறுமணம் கொண்ட மலராக தவழ்கிறது.


பாரதியின் இந்த குறிப்பின் வாழும் உதாரணமாக தாமரை மலரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு தாமரையால் இது முடியும் என்றால் ஒரு மனதினால் முடியாதா? நிச்சயம் முடியும்!




Note: The image in this post is licensed with creative commons.


The copyright for this image belongs to miheco. Click on the image or here to view the image on miheco's website.



Tuesday, June 30, 2009

நன்றி சொல்ல மாட்டேன் - I will not thank you



ஒரே நிமிடம் தான் - ஆனால் கேட்டவுடன் கண்கள் பனித்து விட்டது! இது சொல்லும் வார்த்தை பற்றி இல்லை, சொல்லும் மனிதரின் தன்மை பற்றி!

Saturday, June 27, 2009

சென்னை ஆட்டோக்கள்!


நான் சாதாரணமாக ஆட்டோக்களில் போவதில்லை. இருப்பதிலேயே கடினமான வேலை அவர்களிடம் பேரம் பேசுவதுதான்! வரையயறுக்கப்பட்ட தொகை கி.மிக்கு ரூ 7/- என்றிருக்க அவர்கள் சாதாரணமாக வசூலிப்பது ரூ 20/-. சில முறை இதை அவர்களிடம் சுட்டி காட்டியிருக்கிறேன். எனக்கு வந்த பதில்களில் சில:


"மீட்டர் கட்டுப்படி ஆகாது"

"தனியா திரும்பி வரணும்"

"இன்னிக்கு சண்டே"


அதனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து Clear "No Auto" போலிசிதான். 2-3 மூன்று கி.மீ இருந்தால் நடந்து வந்து விடுவேன். அதற்கு மேலிருந்தால் MTCயிடம் சரணாகதிதான். கூட யாரேனும் இருந்தால் இந்த பாலிசியில் இருந்து வதிவிலக்கு வாங்கி கொள்வதுண்டு. ஆனால் பேரம் பேசுவது அவர்கள் தலைவலி! அனேகமாக ராதாவாக இருக்கும்.


ஒருமுறை இரவு பத்து மணிக்கு தி.நகரிலிருந்து வீட்டிற்கு வர ஒரு ஆட்டோ ஓட்டுநர் கேட்ட தொகை ரூ 150/-. இந்த பழக்கதை எல்லாம் நாம் நினைத்தால் நிறுத்த்லாம் - மீட்டர் இல்லாமல் யாரும் ஆட்டோவை உபயோகப்படுத்தக்கூடாது! இருக்கும் சட்டம் எல்லாம் எழுத்து அளவில் மட்டுமே இருப்பது போல இருக்கிறது!



இந்த தருவாயில் ராதா எழுதிய அனுபவம் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது!



பி.கு: கோயம்புத்தூரிலும் இதே கதைதான்!

பி.கு2: நான் பார்த்தவ்ரை ஹைதராபாத்தில் எல்லோரும் மீட்டர் போடுவதுண்டு. அங்கே எப்படி இவ்வளவு discipline என்று புரியவில்லை. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாமே நமது அரசாங்கம்!


Note: The image in this post is licensed with creative commons.

The copyright for this image belongs to Prince Roy. Click on the image or here to view the image on Prince Roy's website.

Wednesday, June 24, 2009

019 - கெடுப்பது சோர்வு


எதை கெடுத்தாலும் சோர்வுதான்! அடிப்படியாக, உள்ளே இருக்கும் உயிர்சக்தியை கெடுத்தால் நேரடியாக சோர்வுதான். அப்படி இல்லாவிட்டாலும், உற்சாகத்தை கெடுத்தாலும் சோர்வுதான்.

கேட்க சாதரணமாக தோன்றினாலும், இது வாழ்க்கை அடிப்படையையே மாற்றும் ஒரு விஷயம். கோர்வையாக ஒரு கணம் தாண்டி இன்னொரு கணம் வருவது தானே வாழ்க்கை. உற்சாகம் இல்லாவிட்டால் எப்படி?


எதையும் கெடுக்க வேண்டாம்!


Note: The image in this post is licensed with creative commons.

The copyright for this image belongs to lepiaf.geo. Click on the image or here to view the image on lepiaf.geo's website.

Wednesday, June 10, 2009

மூன்று தொப்பி தந்திர விமர்சனம்

அதாங்க, ஹாட்ரிக் விமர்சனம்!

யாவரும் நலம்:
அப்பழுக்கில்லாத திரைக்கதை. நிஜமாகவே பயமுருத்தும் கதையோட்டம். குறை என்று சொல்ல ஒன்றும் இல்லை. ஒரு கேள்வி மட்டுமே. இது போன்ற படங்கள் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்துமா, இல்லை இதுவும் டைம்-பாஸ் மட்டும்தானா?

பசங்க:
கடைசி வரையில் பசங்களை ஹீரோக்களாக வைத்ததற்கு டைரக்டருக்கு ஒரு ஷொட்டு! இதுவரை எந்த படமும் இதை செய்ததில்லை என்று நினைக்கிறேன்! பல "நிஜ ஹீரோக்களை" பசங்களை வைத்து நன்றாக ஓட்டியதற்கு இன்னொரு ஷொட்டு! இந்த வெற்றி கிடைக்க வேண்டியதே!

ராமன் தேடிய சீதை:
ரொம்ப இயல்பாக கதையை கொண்டு சென்றதற்கு இயக்குநரை பாராட்ட வேண்டும். இன்னொன்று, சேரன் தவிர இரண்டு மற்ற கதாபாத்திரங்களுக்கு ஒரு நீண்ட நேரம் ஒதுக்கியதற்கும் தைரியம் வேண்டும். படத்தில் திருப்பம், விறுவிறுப்பு என்று ஏதும் இல்லாவிடினும் ரசிக்க முடிந்தது!

Wednesday, June 03, 2009

அறை எண் 305ல் கடவுள்

இந்த படம் வெளி வந்த போது நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்செயலாக சமீபமாக பார்க்க நேர்ந்தது.

இந்த படம் தோல்வி அடைந்ததை வைத்து சொல்கிறேன் - பார்வையாளர்களாக நாம் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.

"It is preachy" என்று ஒரு விமர்சனம் படித்தேன். அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், "to be preached" நிலையில் தானே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையாளனின் உள்நிலையை ஒரு படியேனும் உயர்த்தும் திறன் இந்த படத்திற்கு உண்டு!

Tuesday, June 02, 2009

குறை ஒன்றும் இல்லை - kuRai onRum illai

இந்த பாடல் (வரிகள், இசை இரண்டுமே) அருள் தவழும் நிலையில் உருவாகி இருக்க வேண்டும். இந்த பாடலின் சாரம் "நீ இருக்க வேறேதும் தேவையில்லை" என்பதே. இதே பொருளை மீண்டும் மீண்டும் வேறு கோணங்களில் வழங்கி இருப்பார்கள். இதில் வரும் கடவுளின் பேரில் நீங்கள் கவனத்தை செலுத்தினீர்களே ஆனால் பாடலின் பக்தி கருவை தவற விட்டு விடுவீர்கள் - என்ன பேர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்களேன்!

"...வேண்டியதை தந்திடும் வேங்கடேசன் என்றிருக்க, வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா..." - இதை எப்பொழுது வேண்டுமானாலும் உங்களால் சொல்ல முடியுமானால் உங்கள் வாழ்வு நிச்சயம் அருள் ததும்பியதாகத்தான் இருக்கும்!

Tuesday, April 28, 2009

அபிராமி அந்தாதி - abirAmi an-thAthi

"...நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்..."


எப்படி இது போல வார்த்தை வந்து விழுகிறது! மேலே சொன்ன வரிகளை எனக்கும் சொல்ல தோன்றுகிறது!

முழு தொகுப்பை இங்கு காணலாம்.

Wednesday, April 22, 2009

சத்குருவின் சந்நிதியில் - Sadhguruvin Sannithiyil

அங்கு நடந்தது என்ன என்று நான் சொல்வதை விட, இந்த இரண்டு நிமிட தொகுப்பை பார்த்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் முன்பே ஈஷாவுடன் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு முழுவதுமே புரிந்துவிடும்!

Tuesday, April 14, 2009

பத்து வருடம் கழித்து - ten years later

"இன்னிக்கு மூணு போட்டு வந்திருக்குடா, பாரு!" என்றவாறு ரமேஷின் அம்மா போட்டோக்களை நீட்டினாள்.

"எல்லாமே பொருந்தி இருக்காம். பாத்துட்டு தகவல் சொன்னா போதும். மேல இருக்கறவ நல்லா கலரா இருக்கா. என்ன சொல்ற?"

ரமேஷ் மூன்று போட்டோக்களையும் நோட்டம் விட்டான். முதல் பெண் கலராகவும், இரண்டாமவள் சுமாரான கலராகவும் மூன்றாமவள் கருமையாகவும் இருந்தாள். அம்மாவுக்கு முதல் பெண் பிடித்து விட்டதென்றும் புரிந்தது.

"அம்மா, நான் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சொல்றேன்" என்றவாறு போட்டோக்களை அவன் அறைக்கு எடுத்து சென்றான்.

"டேய் எங்கடா போற? பத்து நிமிஷம் கழிச்சு சொல்றதை இப்போவே சொல்ல முடியாதா?" பதில் வருவதற்குள் கதவு தாளிடும் சத்தம் கேட்டது.

ரமேஷ் செவிற்றில் சாய்ந்து முதல் பெண்ணின் போட்டோவை மடியில் வைத்து அவளை நன்றாக உற்று பார்த்தான். பத்து வருடம் கழித்து அவளுடன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்ணை மூடி பார்த்தான்.

காலை நேரம் - வாசலில் இருக்கும் பேப்பரை யார் எடுப்பது என்று இருவருக்கும் சண்டை.

அடுத்து இரண்டாம் பெண்ணின் போட்டோவை வைத்து பார்த்தான்.

ஒரே ஹாலில் அவனும் அவளும். அவன் பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவள் டி.வி பார்த்துக்க்கொண்டிருந்தாள்.

மூன்றாம் பெண்.

இருவரும் டி.வி பார்க்க - அவள் அவன் தோளில் சாய்ந்து அவன் கையை பிடித்திருந்தாள்.

அம்மாவிடம் மூன்று போட்டோக்களையும் நீட்டினான். "எனக்கு நிவேதிதாவை பிடிச்சிருக்கு!"

"யாரு அந்த மூனாவது பொண்ணா? எப்படிடா மூனு பேருல அவளை சொன்னே? ரொம சுமாராதானே இருக்கா? வேணாம்டா!"

"அப்புறம் எதுக்கு என்ன கேட்டீங்க? அவங்களுக்கு போன் பண்ணி எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. கலரை பாத்து பொண்ணு எடுக்க அவ என்ன பொடவையா?"

நிவேதிதா விட்டில் போன் அடிக்க, அவள் அப்பா எடுத்தார்.

"என்னங்க சொல்றீங்க? என் பொண்ணையா?"

"ஏன் அவ்வளவு ஆச்சர்யமா கேக்கறீங்க?"

"பாக்கற எல்லாரும் கருப்பா இருக்கான்னு சொல்லிட்டே இருப்பாங்க சார். அவ கவலையே பட மாட்டா. 'கருப்பா இருந்தா நான் என்ன பண்றது'ன்னு சொல்லுவா. ஆனா அதுக்கெல்லாம் மேல உங்க பையன் போட்டுவை காமிச்சதும் 'இவர் சரின்னு சொல்லிடுவார்னு தோணுதுப்பா'ன்னு சொன்னா!"

போனை வைத்த ஏகாம்பரம் ரமேஷை பார்த்து சொன்னார் - "டேய் எப்படியாவது இவளை முடிச்சிடலாம். இவளை விட சரியான பொண்ணு கெடைக்காது!"

Wednesday, March 25, 2009

விருந்தோம்பல் - virunthOmpal

பெரியவர் ஒருவர் சென்னையிலிருந்து மதுரை வந்திருந்தார்.

சாலையை கடக்கும் போது தவறுதலாக ஒரு மோட்டர் சைக்கிளின் குறுக்கே வந்துவிட, அந்த இளைஞன் சுதாரித்து நிறுத்திவிட்டான். ஆனால் அவசரத்தின் நடுவே குறுக்கே அவர் வந்ததும், எதிர்பாராத அந்த தடையினாலும் கோபம் அடைந்தான்.

"யோவ், அறிவில்ல! கண்ணு தெரியாம குறுக்கே வர்ற!"

அந்த பெரியவர் கண் கலங்கி அருகே இருந்த நடைபாதை மீது உட்கார்ந்துவிட்டார். இந்த மாற்றத்தை எதிர்பார்க்காத இளைஞன் சற்று இளகி, வண்டியில் இருந்து இறங்கி அவர் அருகில் சென்றான்.

"பெரியவரே - இப்போ அப்படி என்ன சொல்லிட்டேனு இப்படி உக்காந்துட்டீங்க? ஏதோ அவசரத்தில நிறுத்தினதுனால அப்படி பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க!"

"அது இல்ல தம்பி. சென்னையில பூரா இந்த மாதிரி பேச்சுதான் கேப்பேன். மதுரை வர வேண்டி இருந்த போது, என் மவன் 'அந்த ஊர் காரங்க எல்லாம் மரியாதை தெரிஞ்சவங்க, உனக்கு புடிக்கும்'னு சொல்லி அனுப்பிச்சான்" என்றார் வருத்தத்துடன்.

ஊரில் வசிப்பவருக்கு இப்படிப்பட்ட பொறுப்பெல்லாம் இருக்கிறதா என்று முதல் முறை உறைத்தது அந்த இளைஞனுக்கு். சொன்ன வார்த்தை எப்படியும் காற்றோடு கரைந்து விட்டது. சொல்வதறியாமல் திகைத்து நின்று கோண்டிருந்தான்!

Wednesday, March 18, 2009

நீங்க செத்து போய்டுவீங்க - You are going to die!

"நீங்க ஒரு நாள் செத்து போய்டுவீங்க, தெரியுமா உங்களுக்கு?"
(You are going to die one day, do you know that?)

- Sadhguru to a group of children at a function in Semmedu, near Poondi. He started the function with this. Very cool customer!

- செம்மேடு மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் குழந்தைகளிடம் சத்குரு கேட்ட தொடக்க கேள்வி!

Tuesday, March 10, 2009

பிச்சை பாத்திரம் - Begging bowl

இந்த பாடல், முதலில் "ரமணமாலை"யில் வந்தது என்று நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியாது. மனதை அறுக்கும் பாடல். அந்த பாடலில் (அதாவது ரமணமாலையில்) கர்ம வினைகளின் பிடியில் இருந்து மீளத்துடிக்கும், ஆனால் மீளத்தெரியாத உயிரின் தவிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இளையராஜா. ஆனால் வேறு மாதிரி துடிப்பையும்இதே பாடல் வெளிப்படுத்தும் என்று இந்த படத்தோடு ("நான் கடவுள்") பார்க்கும்போதுதான் புரிந்தது.

முதல் துடிப்பு ஒரு சாதகன் தன் குருவை பார்த்து பாடுவது. இது பெருமையான விஷயம். கண்களில் நீர் தளும்பினாலும், தன் விடுதலைக்கு யார் உதவ முடியுமோ அவரை பார்த்து இறைஞ்சுவது.

இரண்டாவது துடிப்பு சமூக அவலம். தன் அடிப்படை தேவைக்கு ஒருவரை பார்த்து ஒரு கூட்டமே வேண்டுவது ஏற்கவே முடியாது. இப்படிப்பட்ட சமூகம் இருப்பதற்கு அழியலாம் என்றுதான் பாரதி "தனி ஒரு மனிதனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடினான்.

நீங்கள் பிச்சை பாத்திரம் ஏந்த வேண்டும் என்று எந்த குருவும் விரும்புவதில்லை.
அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆனால் எந்த பிச்சைக்காரனும் பிச்சை எடுக்கபோவதில்லை.
அதுதான் இர‌ண்டிற்கும் வித்தியாச‌ம்!